Monday, March 1, 2010

Hats off AjithKumar...

Telugu TV Suma

அ‌ஜீத்தின் உ‌ரிமைக்குரலும் நடிகன்
என்ற சர்வரோக நிவாரணியும்



Watch out His Brave Speech





 





"எந்தப்
பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க.
சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால்
அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி
தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும்,
அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும்
மிரட்டுறாங்க."






கடந்த
6ஆ‌ம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு
விழாவில் முதல்வ‌ரின் முன்னால் அ‌ஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அ‌ஜீத்தின்
பேச்சைக் கேட்ட ர‌‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த
இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்து கை தட்டிய இன்னொருவர் இயக்குனர்
சேரன்.





 


அ‌ஜீத்தின் பேச்சு திரையுலகிலும் அதற்கு
அப்பால் ஊடகங்கள், பொதுமக்கள் மத்தியிலும் வாதப் பொருளாகியிருக்கிறது.
அ‌ஜீத்தின் பேச்சையொட்டி திரையுலகினரும், பொது மக்களும் பல்வேறு கருத்துகளை
வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த கருத்துகள் என்ன என்று பார்ப்பதற்குமுன்
திரையுலகினரை பல்வேறு பிரச்சனைகளுக்காக ஒன்று திரட்டும், அவர்களை
கட்டுப்படுத்தும் திரையுலக சங்கங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து
அறிவது அவசியம்.





உலகில் எல்லாத் துறைகளிலும் சங்கங்கள் உண்டு.
தமிழகத்தில் ஐடி மற்றும் காவல்துறை நீங்கலாக அனைத்துத் துறைகளிலும்
சங்கங்கள் செயல்படுகின்றன. கட்சி சார்ந்த, கட்சி சாராத பல சங்கங்கள் ஒரு
துறையில் இருக்கும். இதில் நமது கருத்தோட்டத்துடன் ஒத்துவரும் எந்த
சங்கத்திலும் நாம் உறுப்பினராகலாம். எந்தச் சங்கமும் தேவையில்லை என்று சங்க
அடையாளம் இன்றியும் ஒருவர் பணிபு‌ரியலாம். யாரும் உங்கள் வேலையை பறிக்க
மாட்டார்கள். தனி மனித சுதந்திரம் வெளிப்படையாக சங்கங்களால்
சுரண்டப்படுவதில்லை. மேலும், வேலையில் சேர்வதற்குமுன் சங்கத்தில்
உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எந்த சங்கத்தில் சேர்வது
அல்லது சேராமல் இருப்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் ஒருவ‌ரின் தனி மனித
உ‌ரிமை சார்ந்தது.






திரைத்துறையில் இப்படி கட்சி
சார்ந்த கட்சி சாராத என்று பல சங்கங்கள் கிடையாது. நடிகர்களுக்கு என்றால்
தென்னிந்திய நடிகர் சங்கம் என்று ஒரே சங்கம். இப்படி ஒளிப்பதிவாளர்கள், கலை
இயக்குனர்கள் என்று அனைத்துப் பி‌ரிவினருக்கும் ஒரே சங்கம்தான். இந்த
சங்கங்களில் உறுப்பினராக இல்லாத ஒருவர் நடிக்கவோ, கலை இயக்குனராக
பணிபு‌ரியவோ, லைட் தூக்கவோ ஏன் வாகனம் ஓட்டும் ஒரு சிறிய வேலையைகூட செய்ய
முடியாது. அதாவது இந்த சங்கங்களின் கருத்துகள், செயல்பாடுகளில் உங்களுக்கு
உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை.
திரைத்துறையில் நுழைய வேண்டும் என்றால் இந்த சங்கங்களில் நீங்கள்
உறுப்பினராகித்தான் ஆக வேண்டும். திரைத்துறையில் நுழையும் போதே பிடித்ததை
தேர்வு செய்யும் ஒருவ‌ரின் தனி மனித உ‌ரிமை காவு வாங்கப்பட்டுவிடுகிறது.
கலைக்கு எல்லை கிடையாது, காற்றைப் போல அது சுதந்திரமானது என்றெல்லாம்
கூறப்படும் திரைத்துறை இதுபோன்ற கட்டுப்பாடான சங்கங்களால்தான் பேணப்பட்டு
வருகிறது.






நடிப்பதற்கு விருப்பம்,
திறமை, வாய்ப்பு மூன்றும் இருந்தாலும் திரைப்படத்தில் நீங்கள் நடிக்க
வேண்டுமென்றால் முதலில் நடிகர் சங்கத்தில் உங்கள் பெயரை பதிவு செய்ய
வேண்டும். அதற்கு சங்கத்துக்கு நுழைவுக் கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்த
வேண்டும். அனைத்து சங்கங்களும் இப்படி பல ஆயிரங்களை நுழைவுக்கட்டணமாக
வசூலிக்கின்றன. உதவி இயக்குனர்களுக்குதான் குறைந்த கட்டணம், 5,000 ரூபாய்.
இந்தப் பணத்தை செலுத்த முடியாத கலையார்வலர்களின் கதி என்ன என்பதை இதுவரை
யாரும் விளக்கியதில்லை.






சில சங்கங்களில் பணம்
இருந்தாலும் உறுப்பினராக சுலபத்தில் சேர்ந்துவிட முடியாது. உதாரணமாக, நடனக்
கலைஞர்களுக்கான சங்கத்தில் ஏற்கனவே அதிகம் பேர் இருப்பதால் புதிய
உறுப்பினர்களை அவர்கள் சமீபமாக சேர்ப்பதில்லை. யாரேனும் ஓய்வு பெறும்போது
காத்திருந்து பல லட்ச ரூபாய் கொடுத்து அந்த உறுப்பினர் கார்டை பெற்றுக்
கொள்ள வேண்டும். அதற்குள் நடனம் மறந்துப் போகாமல் பேண வேண்டியது உங்களின்
கடமை.






இப்படியான கறாரான சங்க
அமைப்பிலிருந்துதான் திரைத்துறையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
மூன்று விதமான பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த‌க் கட்டளைகள்
பிறப்பிக்கப்படுகின்றன.






முதலாவதாக நடிகர் சங்கம்,
தயா‌ரிப்பாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களின் நலனுக்கு நிதி திரட்ட கலை
நிகழ்ச்சிகள் நடத்தும்போது பிறப்பிக்கப்படுவது. கலை நிகழ்ச்சியில் கலந்து
கொள்ளாதவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று வெளிப்படையாக
அறிவித்துவிட்டே இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை தொடங்குகிறார்கள்.
அப்படியும் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பப்படும். பஞ்சாயத்துகள் நடத்தப்படும். பல நடிகர்கள், நடிகைகள் இந்த
நெருக்கடியை சந்தித்திருக்கிறார்கள்.





‘நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் நான்
கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதனால் சங்க கடனை
அடைக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது, அதேநேரம் கடனை அடைக்க
என்னாலான பண உதவி செய்கிறேன்

என்று அ‌ஜீத் கூறிய போது அதனை ஏற்க அப்போதைய நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்
மறுத்ததோடு அ‌ஜீத்தை அவன் இவன் என்று ஏக வசனத்தில் திட்டிய சம்பவமும்
நடந்திருக்கிறது.





 


இரண்டாவதாக ஆளும் கட்சியால் பெறப்பட்ட,
பெறப் போகும் சலுகைகளுக்காக முதலமைச்சரை குளிர்விக்க நடத்தப்படும் பாராட்டு
கூட்டங்கள். திரையுலக சங்கங்கள் கட்சி சார்பற்றவை என்றாலும் சலுகைகளை
முன்னிறுத்தி ஆளும் கட்சிக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்பவை என்பதை இங்கு
குறிப்பிட்டாக வேண்டும்.





ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட பாராட்டு
கூட்டத்தில் தாயே உன்னால்தான் தமிழ் திரையுலகம் பிழைத்திருக்கிறது என்று
நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்கள். அம்மாவைப் பார்த்து ‘சன்
தான் பயப்படணும், ‘சன்னைப் பார்த்து அம்மா பயப்பட‌த் தேவையில்லை
என்று நாடகம் போட்டார் எஸ்.வி.சேகர்.





கருணாநிதி முதலமைச்சரான போது காட்சி மாறியது. திரையுலகை
காத்த சூ‌ரியனே என்றார்கள். சூ‌ரியன் இல்லையேல் இலை இல்லை என்பதாக நாடகம்
உருமாறியது. இந்த அரசியல் கபடி அரங்கேற்றத்துக்கு திரைத்துறையினர் தவறாமல்
கலந்துகொள்ள வேண்டும் என்று சங்கங்கள் ஆணை பிறப்பிக்கும். அதாவது ஒருவரை
திட்டுவதற்கும், வாழ்த்துவதற்கும் ஒரே மனநிலையுடன் நீங்கள் கலந்துகொள்ள
வேண்டும். உங்களின் தனிப்பட்ட கருத்து ஒரு பொருட்டல்ல. மீறினால் தடை, ரெட்
கார்ட்.





 


சமீபத்தில்
முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த
த்‌ரிஷா, ப்‌ரியாமணி, ஸ்ரேயா ஆகியோ‌ரின் படங்களுக்கு ஒத்துழைப்பு
தரப்போவதில்லை என பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் விடுத்த அறிக்கை அனைத்துப்
பத்தி‌ரிகைகளிலும் வெளிவந்தது. நடனமாட முடியாது என்பது ஒரு நடிகையின்
நடிக‌ரின் தனி மனித உ‌ரிமை சார்ந்த முடிவு. அதற்கு தண்டனை விதிக்க
சங்கங்களுக்கு உ‌ரிமை தந்தது யார் என்ற அசட்டு கேள்விகளை யாரும் கேட்க
கூடாது.






மேலும்,
இதுபோன்ற துதிபாடும் நிகழ்ச்சியில் நடனமாடாத, கலந்து கொள்ளாத அனைவர்
மீதும் நடவடிக்கை பாயும் என்று நீங்கள் நினைக்கலாகாது. ஜெயலலிதாவுக்கு
நடந்த பாராட்டு விழாவில் நெப்போலியன், தியாகு, சந்திரசேகர் உள்ளிட்ட திமுக
அனுதாபிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. கருணாநிதிக்கு நடந்த பாராட்டு
கூட்டத்தில் அதிமுக அனுதாபிகள் பங்கேற்கவில்லை. அ‌ஜீத்தை ஏக வசனத்தில்
திட்டிய முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தயா‌ரிப்பாளர் சங்க உறுப்பினருமான
விஜயகாந்தும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மீது பெப்சி தலைவர் நடவடிக்கை
எடுப்பதாக அறிவிக்கவில்லை. த்‌ரிஷா, ஸ்ரேயா, அ‌ஜீத் போன்ற கட்சி
சார்பற்றவர்களுக்கு மட்டுமே தண்டனை. கட்சி சார்புள்ளவர்களுக்கும், கட்சி
நடத்துகிறவர்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது.
தேவைப்பட்டால் ரகசிய பொது மன்னிப்பும் வழங்கப்படும்.






மூன்றாவதாக,
ஒட்டுமொத்த தமிழினம் சார்ந்த ஓகேனக்கல், காவி‌ரி, ஈழம் போன்ற
பிரச்சனைகளுக்காக திரையுலகினரை ஒன்று திரட்டுவது. பெரும்பாலும் அப்போதைய
ஆளும் கட்சியின் தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் பே‌ரிலேயே இந்த
ஒன்றுகூடும் வைபவம் நடத்தப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் காவி‌ரிப்
பிரச்சனைக்காக திரையுலகினர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்தினர்.
இதற்குப் பின்னால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியும், வழிநடத்தலும்
இருந்தது என்பது உலகறிந்த ரகசியம். அதே பாரதிராஜா ஒகேனக்கல் பிரச்சனைக்காக
நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சில‌ரின் தூண்டுதலின் பே‌ரில்
அது நடத்தப்படுவதாக குற்றம்சாற்றினார்.






மேலும்,
இதுபோன்ற கூட்டங்களால் எந்தப் பிரச்சனையிலும் கடுகளவு முன்னேற்றம்
ஏற்பட்டதா என்றால் இல்லை. மாறாக பிரச்சனையை திசை திருப்புவதாகவே இவை
அமைந்திருக்கின்றன.






நெய்வேலி
போராட்டத்தில் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை அழைக்கக் கூடாது என்ற
கட்டுப்பாட்டை மீறி மூன்று மாவட்ட ரசிகர்களுக்கு ரகசிய அழைப்புவிடுத்தார்
விஜயகாந்த். வண்டிகளில் வந்து குவிந்த அவர்கள் விஜயகாந்தை வாழ்த்திப் போட்ட
கோஷத்தால அந்த போராட்டத்தின் நோக்கமே மாறிப்போனது. மேலும், எலிக்கறி
தின்னும் விவசாயிகளுக்காக ஒன்று திரண்ட திரையலகினருக்கு ஒன்பது வகையான அசைவ
உணவுகள் ப‌ரிமாறப்பட்டன. அவை எந்தெந்த உணவுகள் என்ற பட்டியலை சில ஊடகங்கள்
உற்சாகமாக வெளியிட்டன. சகலகலா வல்லவனுடன் ஒரே கா‌ரில் வந்த இஞ்சி
இடுப்பழகி யார் என்று காஸிப் எழுதி மகிழ்ந்தன வேறு சில ஊடகங்கள்.





திரையுலகினர் நடத்தும் இத்தகைய போராட்டங்களை காணக்
குவியும் ரசிகர்கள் தங்கள் விருப்பமான நடிகர்கள் வரும்போது எழுப்பும்
கரகோஷம் சாவு வீட்டில் எழுப்பும் உற்சாக கூச்சல்களுக்கு ஒப்பானவை. தமிழன்
பிரச்சனைக்கு தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் நடிகன் போராட வேண்டும் என்று
கோ‌ரிக்கை வைப்பவர்கள் இந்த கூத்தை மனதில் இருத்திக் கொள்வது அவசியம்.
(அதேநேரம்
திரையுலகின‌ரில் ஒரு பி‌ரிவினர் தன்னிச்சையாக முன் வந்து போராட்டங்களை
நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஈழப் பிரச்சனை. இதில் இயக்குனர்கள்
காட்டிய எழுச்சி ச‌ரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டத்தில்
கலந்து கொள்ள யாரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை, மிரட்டப்படவில்லை. இன
எழுச்சி ஆற்றொழுக்காக தானாக எழுந்தது, தமிழகமெங்கும் பரவியது.
தமிழினத்துக்கு துரோகம் இழைத்த பெரும் தலைகள் இந்த எழுச்சியால் தேர்தலில்
மண்ணை‌க் கவ்வினர்).







காவி‌ரி,
ஒகேனக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு போராடும்போது வேறொரு வன்முறையும்
தொடர்ந்து அரங்கேறுகிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட முரளி, ர‌‌ஜினி,
அர்ஜுன், பிரகாஷ்ரா‌ஜ் போன்ற நடிகர்களிடம் கன்னடர்களுக்கு எதிரான
கருத்துகளை சொல்ல வலுக்கட்டாயமாக மைக் அவர்கள் முன் திணிக்கப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் அவர்கள் சொல்லும் கருத்து எவ்விதமான எதிர்வினைகளை
உருவாக்கும் என்பது நாம் அறியாததல்ல.





மலையாள நடிகர் தமிழச்சியை எருமை என்று சொன்னதற்கு நாம்
கொந்தளித்தோம், வழக்கு தொடர்ந்தோம், வீட்டை அடித்து நொறுக்கினோம், தீ
வைத்தோம். அவர் கையெடுத்து மன்னிப்பு கேட்ட பிறகும், யாரை எருமை என்றாரோ
அவரது பாதத்தை கண்ணீரால் கழுவ வேண்டும் என்று ஊடகம் மூலமாக கோ‌ரிக்கை
வைக்கிறோம். இன உணர்வில் தமிழனுக்கு இரண்டு கொம்பென்றால் கன்னடக்காரனுக்கு
ஒன்பது கொம்புகள். அவனை விமர்சித்துவிட்டு ர‌‌ஜினியோ, முரளியோ கர்நாடக
எல்லையில் கால் வைக்க முடியுமா?





 


ஆனால்
இந்த நடிகர்களின் வீடுகள் கர்நாடகாவில் இருக்கின்றன. உறவினர்கள்,
நண்பர்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். அவர்கள் கர்நாடகா செல்ல வேண்டியது
வாழ்வின் அவசியமாகிறது. இதனை தெ‌ரிந்து கொண்டே அவர்களின் முன் மைக்கை
திணிக்கும் நமது புரட்சி‌த் தமிழர்களுக்கு கர்நாடகா செல்ல வேண்டிய
அவசியமில்லை. அவர்கள் படங்கள் கர்நாடகாவில் ஓடுவதுமில்லை. பாதுகாப்பான
இடத்தில் இருந்து கொண்டு வீர வசனம் பேசுகிறார்கள். மற்றவர்களையும்
பேசும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.






அதேநேரம்
இந்த புரட்சி‌த் தமிழர்கள் பாபா படப்பெட்டியை பாமக-வினர் தூக்கிச் சென்ற
போதும், முதல்வன் பட சிடிகள் மதுரையில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட போதும்
வாயே திறக்கவில்லை. காரணம் அவர்கள் வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
படங்கள் தமிழ்நாட்டில் ஓட வேண்டும். வாய் திறந்து பேசினால் வீடு
தாக்கப்படலாம், படப் பெட்டி கடத்தப்படலாம். கருத்து சொன்னால் என்ன
பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தெ‌ரிந்து கொண்டே கன்னடர்களுக்கு எதிராகப்
பேச இவர்கள் மற்றவர்களை வற்புறுத்துகிறார்கள். இது ஒருவித மிரட்டலே அன்றி
வேறில்லை.






இதுபோன்ற
இறுக்கமான தனி மனித சுதந்திரத்துக்கு வழியில்லாத சூழலில்தான் மௌனத்தை
கலைத்து உ‌ரிமைக்கான குரலை தகுதியானர்வர்களின் முன்பு ஒலித்திருக்கிறார்
அ‌ஜீத். இந்தப் பின்புலத்தில்தான் அவரது பேச்சை பு‌ரிந்துகொள்ள வேண்டும்.
அதைவிடுத்து அ‌ஜீத்தை தமிழின விரோதியாக பிரச்சனையை மடைதிருப்புவது
ஆபத்தானது. திரையுலகில் அ‌ஜீத்தால் முன் வைக்கப்பட்டிருக்கும் தனி மனித
உ‌ரிமைக்கான குரலை அது சிதைத்துவிடவும் வாய்ப்புள்ளது.





 


தமிழர்களுக்கும்
அவர்கள் நலன்களுக்கும் அ‌ஜீத் எதிரானவர் என்ற இன விரோதி பிம்பத்தை
வரைவதில் சில ஊடகங்களும், அவரது தொழில் விரோதிகளும் ஏற்கனவே தங்களது
பங்களிப்பை‌க் காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு இனத்தூய்மை என்ற தூ‌ரிகையை
அவர்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களும் கூட இந்த போலி பிம்பத்துக்கு
மயங்கிவிடுகிறார்கள். அ‌ஜீத்தின் பேச்சை அங்கேயே ஆத‌ரித்த சேரன், ர‌‌ஜினி
இருவரையும் இவர்கள் தாக்கவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இன
உணர்வை வெளிப்படையாக காட்டும் சேரனை இனத்தின் பெயரைச் சொல்லி விமர்சிக்க
முடியாது. ர‌‌ஜினியை விமர்சிப்பதன் மூலம் அவரது திரளான ரசிகர்களை பகைத்துக்
கொள்ளவும் இவர்களுக்கு விருப்பமில்லை. மாட்டிக் கொண்டவர் அ‌ஜீத் மட்டும்.






‘தமிழ்நாட்டில்
நடித்து தமிழர்களின் பணத்தில் வீடு, கார் என்று கொழுத்திருக்கும் நடிகன்
தமிழர்களின் பிரச்சனையான ஓகேனக்கல், காவி‌ரி பிரச்சனையில் கலந்து கொள்ள
மாட்டேன் என்று சொல்வது எவ்வளவு திமிர்த்தனம்?
என்று திரையுலகினர் மட்டுமல்லாது
பொதுமக்கள் பலரும் அ‌ஜீத் மீது பாய்ந்துள்ளனர். இந்த உளுத்துப் போன
கேள்வியின் பின்னால் உள்ளது நமது அடிமை மனோபாவமே அன்றி வேறில்லை.






நடிகர்கள்
மட்டுமின்றி மருத்துவர்கள், ஆசி‌ரியர்கள், தொழிலதிபர்கள், வங்கிப்
பணியாளர்கள், ‌ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், எல்ஐசி ஊழியர்கள்,
சாஃப்ட்வேர் இன்‌ஜீனியர்கள், கல்வி நிறுவனம் வைத்திருப்பவர்கள், டாஸ்மாக்
பார் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினரும் தமிழ்நாட்டில் தொழில் செய்து
தமிழர்களின் பணத்தில் சம்பாதிப்பவர்கள்தான். ஒகேனக்கல் என்பதும் காவி‌ரி
என்பதும் நடிகர்களுக்கேயு‌ரிய பிரச்சனை மட்டுமல்ல. இவர்களையும் சார்ந்ததே.
முக்கியமாக நடிகர்கள் எப்படி கலந்து கொள்ள மாட்டேன் என்று திமிர்த்தனமாக
பதிலளிக்கலாம் என்று கேள்வி கேட்பவர்களையும் உள்ளடக்கியதே.






மேலே
உள்ளவர்களை தவிர்த்து நடிகர்களை மட்டும் கேள்வி கேட்பது நமது அடிமை
மனோபாவத்தையே காட்டுகிறது. டாக்டர் செ‌ரியன் நூறு இதய மாற்று அறுவை
சிகிச்சை செய்தவுடன் அவர் நாடாளும் தகுதி பெற்றுவிட்டதாக நாம்
கருதுவதில்லை. ஒருவர் பத்து வழக்குகளில் சிறப்பாக வாதாடி ஜெயித்தால் அவர்
நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றுவிட்டதாக நாம் போஸ்டர்
அடிப்பதில்லை. ஒரு ஆசி‌ரியர் பல நூறு திறமையான மாணவர்களை உருவாக்கினால்
அதுவே அவர் 2011ல் முதலமைச்சராவதற்கான தகுதி என்று நாம் பிரச்சாரம்
செய்வதில்லை. ஆனால், ஒருவன் நாலு படம் நடித்தாலே அவனுக்கு நாடாளும்
பொறுப்பு முதல் தமிழ‌ரின் பூர்வகுடி பிரச்சனை வரை அனைத்தையும் ஏற்று
நடத்துகிற தலைமைப் பொறுப்பை வந்துவிட்டதாக கருதுகிறோம். வருங்கால முதல்வரே
என்று போஸ்டர் அடிக்கின்றோம். தலைவா தலைமை ஏற்க வா என்று கதறி ஒப்பா‌ரி
வைக்கிறோம்.






அதேபோல்
செ‌ரியன் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்பதற்காக அவ‌ரிடம் கொலை
வழக்கை யாரும் ஒப்படைப்பதில்லை. ராம்ஜெத் மலானி சிறப்பாக வாதிடுவார்
என்பதற்காக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு யாரும் அவரை
ப‌ரிந்துரைப்பதில்லை. காரணம் செ‌ரியனின் துறையல்ல வாதிடுவது. மலானியின்
வேலையல்ல அறுவை சிகிச்சை செய்வது. அவர்கள் தத்தமது துறைகளில் மட்டுமே
வல்லவர்கள். ஆனால் ஒருவன் மேக்கப் போட்டவுடனேயே தமிழர்களின் ஒட்டு மொத்தப்
பிரச்சனையை தீர்க்கக் கூடிய, அவர்களை வழிநடத்தக் கூடிய சர்வரோக நிவாரணியாக
மாறிவிடுவதாக கற்பனையான ஒரு வாலை நம் புட்டத்தில் செருகி வசதிக்கேற்ப
ஆட்டிக் கொள்கிறோம்.





இந்த கீழ்த்தரமான அடிமை மனோபாவத்தின் இன்னொரு வடிவம்தான்
எந்தப் பிரச்சனையிலும் நடிகர்கள் கருத்து சொல்ல வேண்டும், முன்னின்று
போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. நடிகர்களின் வேலை நடிப்பதுதான்,
அவர்களை அரசியல்வாதிகளின் வேலையை செய்யச் சொல்லாதீர்கள் என்கிறார் அ‌ஜீத்.
இதன் பொருள் நடிகனுக்கு சமூகப் பொறுப்பு இல்லை என்பதல்ல. நடிகர்களால்
தீர்க்க முடியாத பிரச்சனைகளில் அவர்களை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள்
என்பதே.






யாரும்
வாய் திறந்து பேச முடியாத இறுக்கமான சூழலில் தனது கருத்தை, உ‌ரிமைக்கான
குரலை அழுத்தமாக ஒலித்திருக்கிறார் அ‌ஜீத். அதன் அவசியம் பு‌ரிந்து
கைத்தட்டி வரவேற்றிருக்கிறார் ர‌‌ஜினி. தனிமனித உ‌ரிமையின்பால் தாகம் உள்ள
அனைவரும் அ‌ஜீத்தின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.





ஹேட்ஸ் ஆஃப் அ‌ஜீத்.


0 comments:

Post a Comment